

சென்னை: தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? என்றும் முதல்வர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.