

சென்னை: “தமிழகத்தில் புதிதாகக் கையெழுத்தாகியுள்ள 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து அரசு கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்குத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட, முக்கியமாகத் தொழில்துறை வளர்ச்சியை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. நமது மாநிலத்தில் ஈர்க்கப்படும் ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் தொழில்துறை வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநிலத்துக்குமானது.
அதனால்தான், தற்போது அரசு தரப்பில் கூறப்படும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விவகாரத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதில் சென்னையில் உள்ள வர்த்தக ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அவர்கள் ஏன் இந்த மாநாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள்? அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை?
திரட்டப்பட்ட தகவல்களின்படி, கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (மொத்த முதலீட்டு மதிப்பில் சுமார் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83%), ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கங்களாகவோ அல்லது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திட்டங்களாகவோ தான் தெரிகின்றன.
உதாரணத்திற்கு,'டைட்டன்' நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு என்பது, டிட்கோ (TIDCO) அமைப்புடன் மாநிலத்திற்கு ஏற்கனவே உள்ள கூட்டுறவின் மூலம் வந்ததாகும். புதிய முதலீடுகள் எனப் பார்த்தால் அது வெறும் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே; இது மொத்த முதலீட்டு மதிப்பில் 23 சதவீதமும், வேலைவாய்ப்புகளில் 15 சதவீதமும் மட்டுமே ஆகும்.
நிறுவனங்களின் விரிவாக்கமும், முந்தைய ஆட்சியில் பேசப்பட்டு இறுதி செய்யப்பட்ட முதலீடுகள் கை கூடுவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முதலீடு, புதிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது என்பதற்காக மட்டுமே திடீரென "புதிய சாதனை" ஆகிவிட முடியாது.
முந்தைய அரசு ஒரு தொழில்துறை கட்டமைப்பை உருவாக்கி, முதலீட்டாளர்களை ஈர்த்து, நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கான சூழலை உருவாக்கியது. தற்போதைய அரசு புதிதாக என்ன கொண்டு வருகிறது என்பதைப் பொறுத்தே நியாயமாக மதிப்பிடப்பட வேண்டும்.
எனவே, இன்று கையெழுத்தான நிறுவனங்களின் முழுப் பட்டியலை ஊடகங்களுக்கு உடனடியாக வெளியிட வேண்டும். அதில் உண்மையிலேயே புதிய முதலீடு எது, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கம் எது, முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது எது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.