

சென்னை: கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் விபத்தின்போது, சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுப்பிரமணி உட்பட 11 பேருக்கு விசிஷ்ட ரயில் சேவா விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய ரயில்வேயில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 100 அதிகாரிகள், ஊழியர்களுக்கு விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் கடந்த 9-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிதி, எலெக்ரிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுகளில் தெற்கு ரயில்வேக்கான 3 கேடயங்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் அமைச்சர் வழங்கினார்.
தெற்கு ரயில்வேயின் துணை நிதி ஆலோசகர் ஆனந்த் பன்டியா, மதுரை கோட்டை மூத்த வணிக மேலாளர் கணேஷ், திருவனந்தபுரம் முதுநிலை டெலிகாம் பொறியாளர் ரஞ்சித், தலைமை சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரமோத், ரயில்பாதை பராமரிப்பாளர் பவன்குமார், ரயில் ஓட்டுநர் சுப்பிரமணி உட்பட 11 பேருக்கு விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயில், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது, ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டதில் 19 பேர் காயமடைந்தனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, ஆய்வு மேற்கொண்ட தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள் குழு, பாக்மதி அதிவிரைவு ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுப்பிரமணி, துரிதமாக செயல்பட்டு அவசரகால பிரேக்கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அறிக்கை அளித்தனர். இந்நிலையில் அவரை பாராட்டி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.