

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதாவது 3 முதல் 5 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் 6,600 கி.மீ.தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இச்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் கட்டணத்தை வசூலிக்க, தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதலும், மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதலும் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் மாத்தூர், சூரப்பட்டு, வானகரம், செங்கல்பட்டில் பரனூர், கருங்குழி, காஞ்சிபுரத்தில் பெரும்புதூர், திருவள்ளூரில் நல்லூர், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர் உட்பட 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்கள் மற்றும் ஜீப்களுக்கான சுங்கக்கட்டணம் ரூ.10 வரை உயரும். பேருந்துகள் மற்றும் பிற கனகர வாகனங்களுக்கான கட்டணம் அவற்றின் பிரிவுகளைப் பொருத்து ரூ.40 முதல் ரூ.200 வரை உயரவுள்ளது. சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் போர் பதற்றத்தால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் உணவுகளின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது. தற்போதைய சுங்கக் கட்டணம் உயர்வால் சரக்கு வாகனங்களுக்கான செலவும் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
நியாயமற்ற சுமை: இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை மத்திய அரசு உணர வேண்டும்.
சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் செலுத்திய கட்டணத்துக்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும்.
ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டிருப்பது மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. சுங்கச்சாவடிக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.