

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதி அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை கோரிய தமிழக அரசின் வழக்கு, ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பின்னர் விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள வனத்துறை இடம் தேர்வு செய்தது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளை கேரள அரசு ஆக்கிமிரத்து வருவதாக கூறி கடந்த 2014-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாகன நிறுத்தப்பகுதி கடந்த 1886 ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஒப்பந்தப்படியான ஒப்பந்த எல்லைக்குள் வருகிறதா? இல்லை கேரளா பகுதிக்குள் வருகிறதா? என்பதை கண்டறிய நில அளவீடு செய்ய உத்தரவிட்டது.
குறிப்பாக, இந்திய நில அளவைத்துறை அல்லது பரிந்துரை செய்யப்படும் அதிகாரிகள் சர்வே நடத்த வேண்டும் எனவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் பகுதியில் நடத்தப்பட்ட சர்வேயின் இறுதி அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முல்லைப் பெரியாறு அணையில் கேரளா அரசு கட்டி வரும் வாகன நிறுத்துமிடம் பிரச்சினைக்குரிய இடத்தில் இல்லை எனவும், வாகன நிறுத்துமிடம் முழுக்க முழுக்க கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆகும் என இந்திய நில அளவைத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் வழக்கு விவகாரம் தொடர்பாக பதிவாளர் நீதிமன்றத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறைகள் நடைபெற்று வருவதால், அது முடிவுற்ற பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் உமாபதி ஆஜராகி கோரிக்கை வைத்தார்.
அந்த, கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பதிவாளர் நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பின்னர் முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.