

திருநெல்வேலி: அல்வா நகரான திருநெல்வேலியில் வெற்றி பெறுவதற்காக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய், நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என முக்கிய தலைவர்கள் பலரும் இத் தொகுதியில் ஆதரவு திரட்டியிருக்கும் நிலையில் 5 முனை போட்டியே தற்போதுவரை நிலவுகிறது.
கங்கைகொண்டான் சிப்காட், பேட்டை தொழிற்பேட்டை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை இத் தொகுதியில் இருக்கின்றன.
பட்டியலினத்தவர் பெரும் பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் பிள்ளைமார், முக்குலத்தோர், யாதவர், நாடார், இஸ்லாமியர் கணிசமாகவும் மற்றும் பல்வேறு சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர். காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்கிறது.
மாவட்டத்தின் 2-வது பெரியகுளமான மானூர் குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து மட்டுமின்றி, தாமிரபரணியில் இருந்து பம்பிங் முறையில் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பேட்டை அரசு கூட்டுறவு நூற்பாலை கால் நூற்றாண்டு காலமாக மூடியிருக்கிறது.
20 வேட்பாளர்கள் போட்டி
இத்தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1977 முதல் 1986 வரை தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வெற்றிபெற்றிருந்தாலும், 1989 முதல் 2016 வரை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.
அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா
பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் 2001 முதல் 2021 வரை 5 தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றுள்ளார். தற்போதைய தேர்தலில் இத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக வேட்பாளர் சு. சுப்பிரமணியன், அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா. சத்யா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோரிடையேதான் கடும் போட்டியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல் படுத்தவில்லை என்பதால் அச்சமூகத்தினரிடம் அதிருப்தி உள்ளது. இதனால் அதிமுக வேட்பாளருக்கு பிள்ளைமார் சமுதாயத்தினரின் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில் முக்குலத்தவர் சமுதாயத்தை சேர்ந்த ஆர்.எஸ். முருகன் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அச்சமுதாயத்தை சேர்ந்த தச்சை கணேசராஜாவுக்கு கிடைக்கும் வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. சொந்த ஊர்க்காரர், விவசாயி என்பதெல்லாம் கணேசராஜாவுக்கு கை கொடுக்கும்.
தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன்
பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு அச்சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளும், கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளால் கிராமப்புறங்கள் நிறைந்த இத்தொகுதி மக்களின் வாக்குகளை அள்ளலாம் என்று திமுக கணக்கு போட்டுள்ளது.
மேலும் பேட்டை, மானூர் பகுதிகளில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் என்று திமுக நம்புகிறது. இத்தொகுதியில் பட்டியலினத்தவர் வாக்குகளை பெறுவதற்கு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன்ஷியாம் கிருஷ்ணசாமி பட்டியலினத்தவர் வாக்குகளை நம்பி களமிறக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குகள் சிதறும் நிலையுள்ளது.
நாதக வேட்பாளர் பா. சத்யா
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா. சத்யா யாதவர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 9.80 சதவீத வாக்குகளை இவர் பெற்றிருந்தார். இதனால் இம்முறையும் வாக்குகளை இவர் பிரிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவுக்கு அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் அக் கட்சி வேட்பாளர் ஆர்.எஸ். முருகனுக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நடுநிலையாளர்கள் யார் பக்கம்?
கடந்த பல தேர்தல்களில் வெற்றி தோல்விக்கான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு. எனவே போட்டி கடுமையாகவே இருக்கும். சாதி, மதம் என்ற நிலைகளை தாண்டி நடப்பு அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் வாக்குறுதிகள், ஆளும், ஆண்ட கட்சிகளின் செயல்பாடுகள் போன்றவற்றை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்கும் நடுநிலையாளர்கள் யார் பக்கம் என்பது இத் தொகுதியில் வெற்றிதோல்விக்கு முக்கியமாக இருக்கும்.
அல்வாவுக்கு பெயர் பெற்ற திருநெல்வேலி வாக்காளர்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் யாருக்கெல்லாம் அல்வா தரப்போகிறார்கள். யாரை சட்டப்பேரவைக்கு அனுப்பவுள்ளனர் என்பது இன்னமும் கணிக்க முடியாததாகவே உள்ளது. அல்வா நகரம் எந்த வேட்பாளருக்கு இனிக்கும், எந்த வேட்பாளர்களுக்கு கசக்கும் என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,33,571
பெண் - 1,42,206
மூன்றாம் பாலினத்தவர் - 80
மொத்த வாக்காளர்கள் - 2,75,857