திருச்செந்தூர் தொகுதியை வெல்லப் போவது யார்?

திருச்செந்தூர் தொகுதியை வெல்லப் போவது யார்?
Updated on
3 min read

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தொகுதியாகும். உலக பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், சின்ன ரோமாபுரி என்றழைக்கப்படும் மணப்பாடு, ஏராளமான பள்ளிவாசல்கள் நிறைந்த காயல்பட்டினம், செம்மணல் தேரிக்காடுகள் போன்றவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. உடன்குடியில் ரூ.13,077 கோடி மதிப்பீட்டில், தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் மின் உற்பத்தி கடந்த மாதம் தொடங்கியுள்ளது. இதனால் தொழில் துறையிலும் இந்த தொகுதி வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது.

முறையே நாடார், பட்டியலின மக்கள், மீனவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர். மற்றவர்கள் பரவலாக உள்ளனர். மீன் பிடித்தொழில், கருப்பட்டி, பனை பொருட்கள், உப்பு உற்பத்தி, ஆத்தூர் வெற்றிலை விவசாயம் ஆகியன முக்கியத் தொழில்களாகும்.

தொடர் வெற்றி

1952 முதல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 8 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வென்றுள்ளன. 2001 மற்றும் 2006 ஆகிய இரண்டு தேர்தல்களில் அதிமுக சார்பிலும், அதன்பின்னர் 2009 இடைத்தேர்தல், 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 4 தேர்தல்களில் திமுக சார்பிலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடர்ச்சியாக 6 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.

2021 தேர்தலில்

கடந்த 2021 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் 63,011 வாக்குகளும், நாதக வேட்பாளர் குளோரியான் 15,063 வாக்குகளும் பெற்றனர். தற்போது, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

13 பேர் போட்டி

இத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனே 7-வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்கள் போல் இல்லாமல் இம்முறை அவருக்கு எதிராக தொகுதியில் ஆங்காங்கே சில அதிருப்திகள் காணப்படுகின்றன.

இதனை அவர் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் காண முடிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகள், தற்போதையை தேர்தல் அறிக்கை ஆகியவற்றை கூறி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். கூட்டணி மற்றும் வலுவாக உள்ள சிறுபான்மை வாக்கு வங்கி அவருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

<div class="paragraphs"><p>பாஜக வேட்பாளர்&nbsp;கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்</p></div>

பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

பாஜக போட்டி

அவரை எதிர்த்து தேஜகூ சார்பில் பாஜக வேட்பாளராக கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், தற்போது பாஜக வேட்பாளராக களம் காணுகிறார்.

திருச்செந்தூரில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறிவிட்டது என கூறியும், மத்திய பாஜக அரசின் சாதனைகள், திட்டங்களை எடுத்துக் கூறியும் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த தொகுதியில் பாஜகவுக்கு என உருவாகியுள்ள வலுவான வாக்கு வங்கி, கூட்டணி பலம், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அதிருப்தி ஆகியவை தனக்கு கைகொடுக்கும் என அவர் நம்புகிறார்.

<div class="paragraphs"><p>தவெக&nbsp;வேட்பாளர்&nbsp;ஜெ.முருகன்</p></div>

தவெக வேட்பாளர் ஜெ.முருகன்

தவெக சார்பில் தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரான ஜெ.முருகன் போட்டியிடுகிறார். இவர், விஜய் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரவும் தனக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியா கட்சியின் திட்டங்களை எடுத்துக் கூறியும், மீனவர்கள், விவசாயிகள் நலன்களை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருச்செந்தூர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம், கோடை வெயிலை விட அனலாக இருக்கிறது. இதில் யாருக்கு வாக்காளர்கள் மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருச்செந்தூர் நகரில் தட்டுப்பாடில்லாமல் குடிநீர், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி ரயில் சேவை, திருச்செந்தூரில் புறவழிச்சாலை, வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம் பகுதிகளில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம், குதிரைமொழி தேரியில் குளம் வெட்டி நீராதாரத்தை பெருக்க செய்தல், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தல், நலிவடைந்து வரும் பனைத்தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை, தென்கால் பாசனக் குளங்களை பராமரித்து கடலில் வீணாகச் செல்லும் நீரை தேக்க நடவடிக்கை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தொலைநோக்கு திட்டம் உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.

<div class="paragraphs"><p>நாதக வேட்பாளர் ஒபிலியா</p></div>

நாதக வேட்பாளர் ஒபிலியா

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,13,407

  • பெண் - 1,19,496

  • 3-ம் பாலினத்தவர் - 30

  • மொத்த வாக்காளர்கள் - 2,32,933

திருச்செந்தூர் தொகுதியை வெல்லப் போவது யார்?
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in