

அப்பாவு
நெல்லை: “தவெக தலைவர் நடிகர் விஜய், ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்?” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலியில் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 876 குடும்பங்களுக்கு ரூ. 129 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரெட்டியார்பட்டியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில், சந்தை மதிப்பில் ரூ.18 லட்சம் மதிப்பிலானதாகும்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோது மாநில அரசின் கடன் ரூ. 5.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், நாங்கள் வாங்கிய கடன் அனைத்தும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம் ரூ.1000, காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததால் விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம், நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.