

கே.ஜி.அருண்ராஜ்
நாமக்கல்: கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் இம்மண்ணின் மைந்தரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணன் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
1977-1984 மற்றும் 2001-2006 வரை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சி.பொன்னையன் அமைச்சராக பதவி வகித்தார். 1991-96 வரை எம்எல்ஏவாக இருந்த டி.எம்.செல்வகணபதி அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் இம்மண்ணின் மைந்தர்கள். மேலும், அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைமையிடம் மிக நெருக்கமாக இருந்தவர்கள். 2001-06-க்கு பினர் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றாலும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதனால், இத்தொகுதி விஐபி அந்தஸ்தை இழந்தது.
இந்நிலையில், நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளராரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான கே.ஜி.அருண்ராஜ் வெற்றி பெற்று, புதிய அரசின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். இவர் கட்சி தலைவரும், முதல்வருமான விஜய்யுடன் நெருக்கமானவர். இதனால், இவருக்கு முக்கிய துறை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தவெகவினர் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் அமைச்சரவையில் இடம் பெறுவதால், மீண்டும் திருச்செங்கோடு தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது.