

திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன்
சென்னை: தமிழக சபாநாயகருக்கு எதிராக செயல்பட, ஆளும் தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். அப்போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கட்சிக்குத் தாவி வருகின்றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்களில் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வேறு பணியில் இருப்பதாக கூறி எம்எல்ஏ இளையராஜா அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்த போது, ‘‘இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்ட விரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன், லஞ்சம் வழங்க முன்வந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்தது தெரிய வந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் அறிவுரையின்படியே, எம்எல்ஏ இளையராஜாவை திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கருத்துக் கணிப்பு நிறுவனம் என்ற பெயரில் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா, பின்னணியில் வேறு முக்கிய நபர்கள் உள்ளனரா அல்லது ஆட்சியைக் கவிக்கும் நோக்கின் முதல் கட்ட முயற்சியா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் 2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.