வட தமிழக கடலோர பகுதிகளுக்கு இணையாக நகரும் டிட்வா புயல்: எங்கெல்லாம் ரெட், ஆரஞ்சு அலர்ட்?

படம்: ம.பிரபு

படம்: ம.பிரபு

Updated on
2 min read

சென்னை: வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல், வட தமிழக கடோலர பகுதிகளுக்கு இணையாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (நவ.30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (டிச.1) திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில்,  சென்னைக்கு தென்கிழக்கே 180 கிமீ தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டிருந்தது. அப்பொழுது, புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கிமீ ஆக இருந்தது. இது வடதமிழக கடலோர பகுதிகளுக்கு இணையாக வட திசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது வட தமிழக கடற்கரையிலிருந்து, குறைந்தபட்ச தூரமானது, 30 கிமீ ஆக இருக்கக்கூடும்.  

இதன் காரணமாக இன்று (நவ.30), வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ரெட் அலர்ட்: இன்று (நவ.30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஒருசில இடங்களிலும் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

ஆரஞ்சு அலர்ட்: இன்று (நவ.30) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

நாளை (டிச1.) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  

வட தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில். தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.  

தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காரைக்காலில் 19 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 17 செமீ, நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் தலா 15 செமீ, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தலா 14 செமீ, ராமநாதபுரம்  மாவட்டம் தங்கச்சிமடம், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தொண்டி, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் 13 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கண்ணி, வேதாரண்யத்தில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

<div class="paragraphs"><p>படம்: ம.பிரபு</p></div>
டிட்வா புயலால் 3 பேர் பலி; 57 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்பு: தமிழக அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in