

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், "நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. 200 காவல்துறையினர் எங்களை சூழந்து கொண்டனர். எங்களை நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதிக்க இயலாது எனக் கூறினார்கள். தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு டிச.9-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கில் டிச.3-ல் பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டார்.
144 தடை விவகாரம்: அதேபோல், திருப்பரங்குன்றம் பகுதியில் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த விக்னேஷ், உய ர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் பகுதியில் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், “தனி நீதிபதி 144 தடை உத்தரவை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.