திருமாவளவன் | கோப்புப் படம்.
திருமாவளவன் | கோப்புப் படம்.

“ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்” - திருமாவளவன் விமர்சனம்

Published on

கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: காங்கிரஸை எதிர்த்து தேர்தலில் போட்டியிடத்தான் பாஜக இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை செயல்படவிடாமல் தடுத்து, அதை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அரசாங்க மதம் இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு இல்லை. இங்கு மக்களுக்கு மதம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு மதம் இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக நின்றவர்கள் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு. காங்கிரஸுடன் திருமாவளவன் நிற்பதற்கு முக்கியமான காரணம் இதுதான்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோருடன் என்னால் கைகோத்து நிற்க முடிந்தது. இன்று அந்த நிலை இல்லை. இனி ஒன்று சேர முடியுமா? என்ற கேள்வி உள்ளது. இது சனாதன சக்திகளின் சூழ்ச்சி. இதையெல்லாம் கடந்து ஒன்று சேர வேண்டும் என்றார்.

முன்னதாக, மதுரை பெருங்குடியில் விசிக சார்பில் தூய்மை பணியாளர்களின் புத்தாண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சீமான் தமிழ் தேசிய அரசியல் பேசுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், அவர் பேசும் அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளது. திமுக என்னும் தேர்தல் கட்சியை மட்டுமே அவர் எதிர்க்கவில்லை, அடிப்படை தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். பாஜகவின் ஹெச்.ராஜா,குருமூர்த்தி பேசும் அரசியலை அப்படியேசீமானும் பேசுகிறார்.

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார். அதனடிப்படையில் தான் சீமான் கருத்தை விமர்சித்தோமே தவிர,மற்றபடி அவர் மீது எங்களுக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும், உள்நோக்கமும் இல்லை. நான் மங்களூர் தொகுதியில் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் போட்டியிட்டேன். பாஜக இருக்கும் அணியில் சேரமுடியாது என்று சொன்னபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களோடுதான் கூட்டணி வைக்கிறீர்கள், பாஜகவோடு அல்ல என்று சொன்னதன் பேரில் அந்த அணியில் இணைந்தோம்’’ என்றார்.

திருமாவளவன் | கோப்புப் படம்.
பழனிசாமி வெளியிடும் அறிக்கையை எழுதிக் கொடுப்பது ‘கமலாலயம்’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in