

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
அரூர்: “தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா முழங்குகிறார். அவர் எப்படி அதனைச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டும். அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “தருமபுரி பகுதியில் திமுக கூட்டணி எந்தளவுக்கு வலுவாக உள்ளது என்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியே சாட்சி. மீண்டும் அந்த வெற்றியை உறுதி செய்யவேண்டும்.அதே போல் தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால் இதனை தடுக்க சிலர் சதி செய்கின்றனர்.
அமித் ஷா, தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என்று முழங்குகிறார். அவர் எப்படி அதனை சொல்கிறார் என்று நினைக்க வேண்டும். அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது. அவர் ஏற்கனவே பிஹாரில் சொல்லியது போல் வெற்றி பெற்றனர். கேரளாவில் மாநகராட்சியை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அக்கட்சிக்கு வாக்குச்சாவடி முகவர் இல்லை, கட்சி கட்டமைப்பு இல்லை. ஆனாலும் முழங்குகிறார். பீகார் போல் வாக்கு திருட்டு முறையில் தமிழகத்திலும் வெற்றி பெற நினைக்கிறார்.
திமுக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கட்டமைப்பு வைத்துள்ளது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் இந்த கட்டமைப்பில்லை. கடந்த தேர்தலில் முதல்வர் அவர்களின் சதிகளை முறியடித்தார். இந்த தேர்தலிலும் ஒற்றுமையாக செயல்பட்டு நாம் முறியடிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல்லை வைத்து, நீதித்துறைய வளைத்து, காவல் துறை, அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்துள்ளனர். இதற்கெல்லாம் அச்சப் படாமல், துணிச்சலாக முதல்வர் உள்ளார்.
தமிழ்நாட்டை காக்க அதிகார கும்பலை தடுக்க கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்றார்.