

தருமபுரி: விசிக-வை எந்த சக்தியாலும் உரசியோ, சீண்டியோ பார்க்க முடியாது, என தருமபுரியில் திருமாவளவன் பேசினார். தருமபுரியை அடுத்த ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் விசிக மாவட்ட நிர்வாகி இல்லத் திருமண விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: விசிகவை எப்படியாவது கூறு போட்டுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தூக்கத்தை இழந்த கும்பல் இன்று ஏமாற்றமடைந்துள்ளது.
விசிக உடையப்போகிறது, உட்கட்சியில் கடும் குழப்பம் நிலவுகிறது, திருமாவுடன் எல்லோரும் முரண்பட்டு நிற்கிறார்கள் என்றனர். ஒரே ஒரு தம்பி, என் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தவர் நம் இயக்கத்தை விட்டு வெளியேறினார்.
மற்றவர்கள் இந்த இயக்கத்தில் இருந்து செயல்பட்டு வரும் நிலையிலும் பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் கற்பனை மூட்டைகளை எழுதிக் குவித்தனர்.
அவர்களின் நோக்கம், திருமாவளவன் தலைமையை குறிவைத்து தாக்குதல் நடத்தி விசிகவை சிதறடித்து விட வேண்டும் என்பது தான். நூற்றுக்கணக்கான முன்னணி தளபதிகள் இந்த இயக்கத்தில் இன்னும் வலிமையுடனும், பற்றுதலுடனும், அவதூறுகளை முறியடிக்கும் வலிமை பெற்றவர்களாக உள்ளனர்.
இந்த இயக்கத்தை எந்த சக்தியாலும் உரசியோ, சீண்டியோ பார்க்க முடியாது. இது சுறாவைப் போல வீரியத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிற இயக்கம். இதில், ஒரு செதிலை உதிர வைப்பதால் சுறாவின் பயணம் நின்று விடாது.
ஒரு தம்பி வந்து உங்கள் (திமுக) கட்சியிலே சேர விருப்பம் தெரிவித்தால் அவரிடம், திருமாவளவன் எங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர். அந்த இயக்கம் ஒரு விளிம்பு நிலை மக்களுக்கான இயக்கம்.
அந்த இயக்கத்தை நாங்கள் பலவீனப்படுத்துகிறோம் என்ற களங்கம் எங்களுக்கு வந்துவிடக் கூடாது’ என்று பெருந்தன்மையுடன் அறிவுரை கூறியிருக்க வேண்டும். இதுதான் அரசியல் அறம்.
ஆனால், விசிகவை பலவீனப்படுத்தவும் எங்களால் முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டை, நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள ஓர் இயக்கம் எடுத்தபோது தான் எனக்கு இதயத்தில் முள் குத்தியது போன்ற ஒரு வலி. ஆனாலும் நான் வருத்தப்படவில்லை.
அதனால் இந்த இயக்கம் சிதறிவிடும் என நான் கருதவில்லை. இறுதி இலக்கை தொடும் வரை என்னுடன் ஓடிவரும் தம்பிகளைக் கொண்டு போராட முடியும் என நான் நம்புகிறேன். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.