

மதுரை: “திருமாவளவனும் சீமானும் தங்களது தனித்துவத்தை இழந்து திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்” என தவெக இணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் திருப்பரங்குன்றம் வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல்குமார் சாடினார்.
இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “விஜய் மீது உயர் நீதிமன்றத்தில் தவறாக வழக்கு தொடர்ந்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால், ரூ.50 லட்சம் தான் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தேவாலயத்தில் விஜய் அரசியல் சின்னத்துடன் மத வழிபாடு செய்ததாக புகார் கூறுகின்றனர். வழிபாடு செய்யலாம்; பிரச்சாரம்தான் செய்யக் கூடாது.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தனித்துவத்தை இழந்துவிட்டன. திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதி காக்கின்றனர். திருமாவளவன் போன்றவர்களும் அந்த ஆதரவு நிலையில் உள்ளனர்.
திருமாவளவனும் சீமானும் தங்களது தனித்துவத்தை இழந்து திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர். பாஜக - அதிமுக பொருந்தாத கூட்டணி. அண்ணாமலைக்கும் பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் பழனிசாமிக்கும் இணக்கமான நிலை இல்லை” என்று அவர் கூறினார்.