சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி முன்பாக வேத மந்திரங்கள் முழங்கி, வாழி திருநாமம் பாட தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலை பிரிவினர் மட்டும் வாழி திருநாமம் மற்றும் பிரபந்தம் பாட அனுமதியளித்து கோயில் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவினர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த 2022 மே 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “கோயிலில் சுவாமியை தரிசனம் செய்யவும், வழிபாடு செய்து பூஜிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. மதம் சார்ந்த மரபு மற்றும் வழிபாட்டு உரிமைகளில் எவ்வித பாகுபாடும் பார்க்கக்கூடாது.
வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நீடித்து வரும் பிரச்சினையால் கோயிலில் சுவாமியை நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. எனவே, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னால் வடகலை பிரிவினர் மற்றும் சாதாரண பக்தர்களும் அமர வேண்டும்.
தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைலேச தயாபாத்திரமும், அதன்பிறகு வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரமும் 10 முதல் 12 விநாடிகள் பாட வேண்டும். அதன்பிறகு தென்கலை, வடகலை மற்றும் பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட வேண்டும். அதன்பிறகு நிறைவாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித்திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகன் வாழித்திருநாமமும் பாட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய்நாராயணன், ஹேமா சம்பத், ஏ.கே.ஸ்ரீராம் உள்ளிட்டோரும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர் அபினவ் பார்த்தசாரதியும், அறநிலையத்துறை தரப்பில் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சுமார் 200 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 1910, 1915, 1963 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வரதராஜ சுவாமி முன்பாக ஸ்ரீசைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது. வடகலை பிரிவினருக்கு இந்த உரிமை நிலைநாட்டப்படவில்லை.
எனவே, இருதரப்பும் சேர்ந்து பாட வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். மேலும் தென்கலை பிரிவு சார்பில் சுவாமி முன்பாக மந்திரங்கள் முழங்கி, பிரபந்தம் மற்றும் வாழி திருநாமம் பாட அறநிலையத்துறையும், போலீஸாரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.