

ஒரு பக்கம், எஸ்ஐஆர் இப்போது வேண்டாமே என திரும்பத் திரும்பச் சொல்லும் திமுக இன்னொரு பக்கம், எஸ்ஐஆர் பணிகளை கவனமாக கண்காணித்து வாக்காளர்களை விடுதலின்றி சேர்த்து முடிக்கும் பணியிலும் கட்சியினரை களத்தில் தீவிரப்படுத்தி வருகிறது.
அதனால் வருவாய்த் துறையினர் புறக்கணிப்பதாகச் சொல்லிவிட்ட நிலையிலும் திமுக-வினர் தெருக்களில் டேபிள் சேரைப் போட்டுக் கொண்டு எஸ்ஐஆர் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் திமுக-வினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கண்டிப்பான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, எஸ்ஐஆர் பணிகளை உடன்பிறப்புகள் முகம் சுளிக்காமல் முடித்துக் கொடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் புதிய உத்தியை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
அதாவது, எஸ்ஐஆர் களப்பணியில் இருக்கும் திமுக தொண்டர் களுக்கு ஒரு படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்க ரூ.10 வீதம் அளித்து வருகிறார்கள்.
இந்தச் செலவை அந்தந்த பகுதியில் இருக்கும் திமுக நிர்வாகிகளே ஏற்றுக் கொள்கிறார்களாம். இப்படியான களப்புலிகளை களத்தில் இறக்கி இருப்பதால் வாக்காளர்கள் பெரிதாக எந்தச் சிரமமும் படாமல் எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள். திமுக-வை தொடர்ந்து ஒரு சில இடங்களில் அதிமுக-வினரும் இந்த பத்து ரூபாய் ஃபார்முலாவை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் தனசேகர், “ஆமாம் படிவத்தை பூர்த்தி செய்து தருவோருக்கு 10 ரூபாய் தருகிறோம். படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வரும் இளைஞர்கள் தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வருவதால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த சிறிய சன்மானத்தைத் தருகிறோம். இதனால் போட்டி போட்டுக் கொண்டு படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்” என்றார்.