

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே மேலூரில் உள்ள திருவுடையம்மன் கோயிலில், சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு நேற்று தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல. 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை உயரவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதற்கு காரணம், பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமைதான். வர்த்தக ரீதியிலான சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே என்றார்.