

தமிழிசை
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட்டை ரத்து செய்வதை விட அதை சீர்திருத்தி வலுப்படுத்துவதே மாணவர்களின் எதிர்காலத்துக்கு உகந்தது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “நீட்டை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் மிகவும் வருத்தமளிக்கிறது. நீட் சமூக நீதிக்கு தடையல்ல. தரமான கல்விக்கான சமமற்ற அணுகல்தான் உண்மையான சவால், அதை சரி செய்ய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.
பல்வேறு பள்ளிகள், கல்வி வாரியங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூக - பொருளாதார பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஒரே தேசிய நுழைவுத் தேர்வு ஒரு பொதுவான அளவுகோலை வழங்குகிறது.
பயிற்சி குறித்த கவலை இருந்தால், அதற்கான தீர்வு அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமான, தரமான நீட் பயிற்சி வழங்குவதாக இருக்க வேண்டும். தேர்வுத்தாள் கசிவு குறித்த கவலை இருந்தால், பிரதமர் மோடி தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மாணவர்களின் மன அழுத்தம் குறித்த கவலை இருந்தால், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் கல்வி ஆதரவை வழங்க வேண்டும். ஆனால் நீட்டை ரத்து செய்வது தீர்வல்ல. தமிழகத்தில் மருத்துவக் கல்வி குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.
பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அதிகாரப்பூர்வ தரவுகளும் இந்த மருத்துவக் கல்வி விரிவாக்கத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், இந்த வாய்ப்புகளுக்கான பொதுவான தேசிய நுழைவுத் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்?
தமிழக அரசு மீண்டும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை கொண்டு வர முன்வருகிறது. ஆனால் பல்வேறு கல்வி வாரியங்கள், மாறுபட்ட மதிப்பீட்டு முறைகள் மற்றும் கல்வித் தரநிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களை ஒரே அளவுகோலில் நியாயமாக எப்படி ஒப்பிட முடியும்? நமது கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்.
நமது ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்.ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான போட்டிக்கான வாய்ப்பு வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஒரு தேர்வை நீக்குவதை விட, மாணவர்களின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
அவர்களுக்கு சிறந்த பள்ளிகளை வழங்குங்கள். இலவச நீட் பயிற்சி வழங்குங்கள். உதவித்தொகைகள் வழங்குங்கள். நம்பிக்கையை வழங்குங்கள். ஆனால் நீட் என்ற பொதுவான தேசிய வாய்ப்பை அவர்களிடமிருந்து பறிக்காதீர்கள்.
தமிழக சட்டமன்றம், நமது குழந்தைகளை போட்டியிடத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; போட்டியிலிருந்து அவர்களை விலக்குவதில் அல்ல. நீட்டை ரத்து செய்ய வேண்டாம். நீட்டை சீர்திருத்தி, வலுப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவோம்.
கல்வி நமது குழந்தைகளை நாட்டுடன் போட்டியிட வலிமைப்படுத்த வேண்டும்; அவர்களை நாட்டிலிருந்து தனிமைப்படுத்தக் கூடாது. தொடர்ந்து அரசியல் கட்சிகளால் ஊக்கமிழக்கச் செய்யப்படும் சூழலிலும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நான் பாராட்டுகிறேன்.
தமிழக மாணவர்களின் சாதனைகள்:
அதிகபட்ச மதிப்பெண் பெற்ற 17 மாணவர்களில், 12 ஆம் இடத்தை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் பெற்றுள்ளார். நாடு முழுவதும் 138 மாணவர்கள் 720-க்கு 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 12 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் 9 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; தமிழக மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியிடும் திறனுக்கான சான்றுகள்.
தமிழக மாணவர்கள் நீட்டில் சிறப்பாக செயல்பட்டு, தேசிய அளவில் போட்டியிடும் திறன் தங்களுக்கு இருப்பதை நிரூபித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால லட்சியங்களை அரசியல் கருத்துகளால் மறைத்துவிடாமல், அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம். அவர்களின் வெற்றிக் கதைகளை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாகக் காட்டுவோம்.
சவால்கள் இருந்தால் அவற்றை சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் மூலம் எதிர்கொள்வோம்; நமது மாணவர்களின் கனவுகளையும் லட்சியங்களையும் பலவீனப்படுத்த வேண்டாம். நமது குழந்தைகளை அவர்களின் சாதனைகள் ஊக்குவிக்கட்டும், அரசியல் கருத்துகள் அவர்களை ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.