

சுபா.இளவரசன்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு(45). இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களிடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசனை, ராஜவேலுவின் தம்பி சசிக்குமார்(43) அணுகியுள்ளார். இதையடுத்து ராஜவேலுவிடம் சுபா.இளவரசன் செல்போனில் பேசியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுபா.இளவரசன் தன்னை மிரட்டுவதாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ராஜவேலு நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டத்தில் உள்ள வீட்டில் இருந்த சுபா.இளவரசனை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.