

கோப்புப் படம்
சென்னை: காவிரி பிரச்சனைக்கு தீர்வு, கள் தடை நீக்கம் ஆகிய வற்றை முன்னிறுத்தி தாராபுரம் இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பான நீதிபதி கோகுல்தாஸ் கமிட்டி அறிக்கையில், கள் தடையை நீக்க வேண்டும். அது ஒரு இயற்கையான பாணம்.தடையை நீக்கினால் இந்த கள்ளச்சாராயசாவுகளை வெகுவாக குறைக்கமுடியும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதை நாங்கள் வரவேற்கின்றோம். அரசு கள்ளுக்கு தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அரசு இதை ஏற்க மறுத்தால் எங்களுடைய போராட்டம் தீவிரப்படுத்தப்படும். மேலும் கள் போதைபொருள் என்பதை நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு தரப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தாராபுரத்தில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தினந்தோறும் நீர் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழக அரசு மீண்டும் ஒரு மறுசீராய்வு குழுவை அமைத்து காவிரி நதிநீர் மன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் அவசியமா என அரசு சிந்தித்து அதை தள்ளி போட வேண்டும் அல்லது கைவிட வேண்டும்.