

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவிக்கிறார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, தங்களுக்காக 12 தொகுதிகளை கேட்டு 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்திருந்தது. அதற்கு அதிமுக சம்மதிக்காததால், 8 தொகுதிகளை தமாகா கேட்டது. அதிமுக-விடம் இருந்து பதில் ஏதும் வராத நிலையில் கண்டிப்பாக 6 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது தமாகா. ஆனால், 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க அதிமுக முன்வந்தது.
இந்த நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமாகா-வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்தார். இதையடுத்து, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. இந்த 5 தொகுதிகளிலும் பாஜக-வின் தாமரைச் சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகிவிட்டதை அடுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளர்களை இன்று அறிவிக்கவுள்ளார். தேர்தலில் ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.