

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை: ‘இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தாவிட்டால் இந்த அரசை தமிழ் சமுதாயம் மன்னிக்காது’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். 3 வயது பெண் குழந்தையைக்கூட சீரழிக்கும் அவல நிலை ஏற்பட் டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கேட்போர் மனதை வேதனைக்குள்ளாக்கியது. ஒருசில வன்கொடுமைகளில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, மதுரை திருமங்கலத்தில் 13 வயது சிறுமி, 4 சிறுவர்களால் வன்கொடுமைக்கு உள்ளான அவலம், கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை என தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதல்வரோ சினிமா வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். திருச்சியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு, அவரது தகுதியையும், தரத்தை யும் உணர்த்துகிறது.
இளம் தலைமுறையினர் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் எழுந்துள்ளது.
இளைய தலைமுறையினரை இந்த அரசு நல்வழிப்படுத்த வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியை வழிநடத்துவோரையும் மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.