

சென்னை: மாநகராட்சியில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில், வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தும் தீவிர சிறப்பு முகாம் வாயிலாக, இதுவரை 1.68 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 71,388 செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்காக புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மா பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாடு மைய பணி நடைபெற்று வருகின்றன. பெருங்குடியில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாடு மையம் தற்காலிகமாக நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகமாக செயல்பட்டு வருகிறது. மணலி மற்றும் பெருங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட தலா 250 நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புளியந்தோப்பு பகுதியில் உள்ள நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடவடிக்கைகளையும், செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் பார்வையிட்டார்.
பின்னர், ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது: தற்போது மாநகராட்சியில் நாளொன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு சராசரியாக 350 முதல் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
முதல்வர் விஜய் உத்தரவின்படி மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், இணை ஆணையர்கள் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), செ.சரவணன் (பணிகள்), மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.