

இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
ராமேசுவரம்: “இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும்” என இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வட மாகாண கடற்றொழில் மீனவப் பிரதிநிதிகளுடன், வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக மீனவப் பிரதிகளுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு பேசியது: “இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடி தொழில் உள்ளிட்டவை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு நீதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த கால அரசாங்கங்களைப் போன்றல்லாமல், தற்போதைய அரசாங்கம் மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பையும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கருதுகிறது. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும்” என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.