

இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
ராமேசுவரம்: இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உறுதிபடத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள வடமாகாண கடல் தொழில் மீனவப் பிரதிநிதிகளுடன். வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக மீனவப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியது இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். சட்டவிரோத மீன்பிடி. இழுவை மடித் தொழில் உள்ளிட்டவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டு நீதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அல்லாமல் தற்போதைய அரசாங்கம் மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பையும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கருதுகிறது. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக. அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.