

வேளாண் துறை அமைச்சர் வினோத்
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மை, மண்வள பாதுகாப்பு, வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதலாவது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும் வேளாண் பட்ஜெட் 6-ம் தேதியும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் தனி பட்ஜெட் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
வேளாண் அமைச்சர் வினோத் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.ஆனந்த், வெங்கட்ரமணன் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் தலைமையுரையாற்றி பேசியதாவது: வேளாண் பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பாக விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துமாறு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், இதுவரை மண்டல அளவில் 4 கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை நீங்கலாக இதர 37 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் மாநில அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள், விவசாய அமைப்பினர், கால்நடை வளர்ப்போர் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட இருக்கிறது.
அதில் மண்வள மேம்பாடு, நீர் மேலாண்மை, வேளாண் சந்தை திட்டங்கள், பயிர் உற்பத்தித் திறன், வேளாண் பொருட்களுக்கு விலை பாதுகாப்பு, நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பரவலாக்குதல், கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம், வேளாண் தொழில்கள் ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
விவசாயிகள் மீது தனி அக்கறை கொண்ட தமிழக முதல்வர், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் திட்டங்களை அறிவித்தார். கடும் நிதி நெருக்கடியிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களில் 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் போதாது. விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். அதற்காக மதிப்புக்கூட்டுவது, நேரடி சந்தை விற்பனை போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த கருத்து கேட்புக் கூட்டம் ஒரு சம்பிரதாயக் கூட்டமாக இருக்காது. விவசாயிகளின் கோரிக்கைகளை பட்ஜெட்டில் இடம்பெறச் செய்யும் ஒரு மக்கள் மேடையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை வேண்டாம்: கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே இனி பேச்சுவார்த்தை கிடையாது என 2013-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. எனவே தமிழக-கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது; சட்டத்தின்படி அது செல்லாது என்பதையும் எடுத்துரைத்தோம்'' என்றார்.