

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்தனர். அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.
அப்போது பேரவைத் தலைவர் பிரபாகர் கூறுகையில், “ஓர் உறுப்பினர் பதவி விலகும்போது காரணம் குறிப்பிடத் தேவையில்லை. உறுப்பினர் விரும்பி ராஜினாமா கடிதம் கொடுக்கும்போது, அந்த கடிதம் முறையாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே எனது பணி. அதை சரியாக செய்துள்ளேன்.
பேரவை விதி 21-ன்படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர், பேரவைத் தலைவருக்கு தனது எண்ணத்தை கைப்பட எழுதி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளதால், ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதங்கள் எனது பரிசீலனையில் உள்ளன. ஆய்வு செய்து வருகிறேன். இதற்கு காலக்கெடு இல்லை. ஆனால், அவகாசம் தேவை. விதிகளின்படி நிச்சயமாக ஆய்வு செய்து முடிவெடுப்பேன்” என்றார்.
ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து, 3 பேரும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டையும் உடனே வழங்கப்பட்டது.
இதற்கிடையே, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, பழனிசாமி அணியில் இன்று இணைந்தனர். இதன்மூலம், பழனிசாமி அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.
பழனிசாமி அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை இன்று சந்தித்து, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.
ஏற்கெனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்று, ராஜினாமா செய்ததால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகின. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் கடந்த 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேர் வெற்றி பெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பழனிசாமி தலைமையில் 22 பேர், சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் என இரு அணிகளாக பிரிந்தனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 13-ம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடா நியமிக்கப்படாத நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள், விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.