

கோவை: “அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டது. சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “வாக்களித்த மக்களுக்கும், என்னை வெற்றியடைய வைக்க உழைத்த மக்களுக்கும் நன்றி. அதிமுக எங்களின் உயிர் மூச்சு; நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்தது. ஒரு சில பத்திரிகைகள் தவறாக சித்தரிக்கிறார்கள். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது. அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.
தவெக இப்போது தான் வந்துள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபட வேண்டும். அதிமுக பல தோல்விகளை கண்டுள்ளது. அதைக் கண்டு நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சி.வி.சண்முகத்தின் கருத்துதான் எங்கள் கருத்து; எங்கள் கருத்து தான் அவரின் கருத்து” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று சந்தித்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இரு அணியினரும் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இரு அணிகள் சார்பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
மேலும், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக பழனிசாமி, கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இந்த நிகழ்வில், சி.வி.சண்முகம் உடன் வரவில்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அவருடன் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட சமரசமும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், “அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டது. சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.