

கோவை: “திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடக்கூடாது. திமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விஜய்யின் கொள்கை” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “திமுக மீது உள்ள எதிர்ப்பு வாக்குகளை நமது பக்கம் திருப்ப வேண்டும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் நமக்குத் தான் வர வேண்டும். புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்க்கு செல்லக் கூடாது. அவர் 10 நாட்களாக வெளியே வராமல் தற்போது வெளியே வந்துள்ளார். அதை மக்கள் பொருட்டாக நினைக்க மாட்டார்கள். விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து விட்டுச் சென்று விடுவார்.
திமுகவை விமர்சிப்பதால் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து செல்ல வேண்டும். இதனால் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விஜய்யின் கொள்கை. ஒரு ஓட்டு கூட மற்ற கட்சிகளுக்கு செல்லக்கூடாது. அனைத்து ஓட்டுகளும் அதிமுகவுக்கு வரவேண்டும். அப்போதுதான் நல்ல திட்டங்கள் கிடைக்கும், சட்டம் ஒழுங்கு சீராகும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். நீங்கள் அதிமுக கூட்டணிக்குதான் வாக்களிக்க வேண்டும். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தபோது விஜய் மருத்துவமனைக்கு சென்று பார்த்தாரா?
சொந்தக் கட்சியை காப்பாற்றாதவர் மக்களை எப்படி காப்பாற்றுவார். சினிமா வேறு; நிஜ வாழ்க்கை வேறு. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் என்றால் அவர் அற்புதமான தலைவர். மக்கள் அவரை நேசித்தனர்; அவரும் மக்களை நேசித்தார். எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.