

சென்னை: ‘சென்னை வெள்ளத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி பேசும்போது, “2021 அக்டோபர் மாதம் சென்னையில் பெரும் மழை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. அகதிகள் போல் மக்கள் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த வரலாறு திரும்பவும் உருவாகக்கூடாது.
அதற்காக, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2023 மார்ச் மாதம் 600 பக்கம் அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கும். 41 மாதங்கள் ஆகியும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, “கடந்த ஆட்சியில் திருப்புகழ் குழு அறிக்கை வெளியிடப்படவில்லை.
தற்போது பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை முதல்வர் விஜய் அமைத்துள்ளார்.
15 நாள்களுக்கு முன்பு அந்தக் குழு கூடியது. பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை, மின்துறை என அனைத்தும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.