அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முக்கியத்துவம் என்ன?

அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முக்கியத்துவம் என்ன?
Updated on
2 min read

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம், இன்று (ஆகஸ்ட் 20) மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த தென் மண்டலக் குழுவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-ன் பிரிவு 15 முதல் 22 வரையிலான விதிமுறைகளின் கீழ், தென் மண்டலக் குழு உட்பட ஐந்து மண்டலக் குழு அமைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா தென் மண்டலக் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தக் குழுக்களில், உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் சுழற்சி முறையில், அதன் துணைத் தலைவராகப் பணியாற்றுகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான குழுச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தைத் தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது. நாட்டின் தென்பகுதியில் உள்ள உறுப்பு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் / துணைநிலை ஆளுநர்கள் / நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தலா இரண்டு அமைச்சர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் / ஆலோசகர்கள், பிற உயர் அதிகாரிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த மண்டலக் குழுவில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நிலையில் தலா ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளது. மாநில அரசுகளால் முன்வைக்கப்படும் விவகாரங்கள், மண்டலக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, ஆலோசிக்கப்படுகின்றன. எஞ்சிய விவகாரங்கள் மண்டலக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்படுகின்றன.

நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், “பாரதக் குழு” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், மண்டலக் குழுவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. வலுவான மாநிலங்களால் மட்டுமே உறுதியான வலிமையான நாட்டைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த மண்டலக் குழு செயல்பட்டு வருகின்றன.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், மண்டலக் குழுக்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகின்றன. இதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இவை செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான ஒரு வலுவான தளமாக இத்தகைய மண்டலக் குழுக் கூட்டங்கள் அமைந்துள்ளன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கான சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, கல்வி தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்தும், இந்த மண்டலக் குழுக்கள் விவாதிக்கின்றன.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முக்கியத்துவம் என்ன?
புகழ்ந்து பேசிய தவெக உறுப்பினரை தடுத்து நிறுத்திய முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in