

சவுமியா அன்புமணி
சென்னை: “மது வணிகத்தை ஊக்குவிப்பது பெண்களுக்கோ, சமுதாயத்துக்கோ ஏற்றது இல்லை” என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று அவர் பேசுகையில், “தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் குறைந்தபட்சம் ஒருநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதன்மூலம் அங்கு பணிபுரியும் ஆண்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியும்.
காலையில் 6.30 மணிக்கு வரும் முதல் பேருந்து திருப்பி அதே கிராமத்துக்கு வர மாலை 6 மணி ஆகும். அங்கு அடிக்கடி பேருந்துகள் இல்லை. மினி பேருந்துகளை கொண்டு வந்து பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை அதிகப்படுத்த வேண்டும். கிராமங்களில் சென்று பாருங்கள். பெண்கள் எல்லாம் வெறும் மஞ்சள் கயிறுதான் போட்டு இருக்கிறார்கள்.
தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் 789 கோடி ரூபாய்க்கு குடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது. மது வணிகத்தை ஊக்குவிப்பது பெண்களுக்கோ, சமுதாயத்துக்கோ ஏற்றது இல்லை. இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். ஆண்கள் வயதாகி கிழவனாக தான் இறக்க வேண்டும் என ஒரு பெண் வேண்டிக்கொள்வாள். ஆனால் தமிழகத்தில் எத்தனையோ இளைஞர்கள் மதுவால் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழக அரசு ஒரே கையெழுத்து மூலம் மதுவை ஒழித்து பெண்களின் தலையெழுத்தை மாற்ற முடியும்” என்று அவர் பேசினார்.
இதனிடையே, “ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி அவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மரியாதைக்குரிய சவுமியா அன்புமணியிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; தேவையில்லாத சர்ச்சை, இடைச்சொல், இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க 100% சமுதாய ரீதியாகத்தான் பேசுகிறார்” என துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்தார்.