

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்துவருகின்றன. மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின் செலவை குறைக்கும் நோக்கிலும் தமிழகத்தில் உள்ளஅரசுக் கட்டிடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தமிழக மின்வாரியம் தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் (சோலார் பேனல்) அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டுஇதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்ட நிலையில், ஒப்பந்தப் பணிகள் முடிந்து, சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடங்களின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை மேற்கொள்ள தகுதிவாய்ந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்டிடங்களில் சூரியஒளி மின்உற்பத்திக்கான பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.
உற்பத்தியாகும் மின்சாரத்தில், அலுவலகத்துக்கான பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும்.இந்த திட்டத்தில் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை விரைவில் முடித்து மின் உற்பத்தி தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.