

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு வழக்கை தென்காசி மாவட்ட போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தென்காசி மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் மணிகண்டன் பனை மரம் ஏறி பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 7-ம் தேதி கள் இருப்பதாக ேசாதனை நடத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்ஐ இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீஸார் இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது. சிபிஐ, எஸ்ஐ இசக்கிராஜா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.