

எம்.பி மாணிக்கம் தாகூர்
சென்னை: ‘மேகேதாட்டு விவகாரத்தில் காவிரி நீரின் மீது தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கான இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் கட்சி அரசியலை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது எந்த ஒரு கட்சியின் பிரச்சினையும் அல்ல தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால தலைமுறையின் நீர் பாதுகாப்பை சார்ந்த பிரச்சினை.
காவிரி நீரின் மீது தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணைய விதிகளையும் மீறி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது.
தமிழ்நாட்டின் உரிமைக்கான இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அனைத்து கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், மக்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்து நம் உரிமையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது. தமிழ்நாட்டின் நலன் முதலில் அரசியல் பின்னால்’ எனத் தெரிவித்துள்ளார்.