

எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டுத்தான் கரூருக்கே செல்ல வேண்டும் என்பது முதல்வர் விஜய் போட்ட சபதமாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: மதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், இருவரையும் நான் வெற்றி பெற வைக்கிறேன் என முதல்வர் விஜய் சொன்னதாக வைகோ வெளிப்படையாகப் பேசியதே குதிரை பேரம் நடந்துள்ளதை காட்டுகிறது. ஆனால், இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையோ அல்லது காவல் துறையோ இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
ஒவ்வொரு எம்எல்ஏவாக தவெகவுக்கு தாவுவதுதான் உண்மையான குதிரை பேர அரசியல். நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால் கூட்டணி கட்சிகள் தவெகவை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம். தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கைப் பொறுத்தவரை, முன்னாள்அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டுத்தான் கரூருக்கே செல்ல வேண்டும் என்று முதல்வர் விஜய் போட்ட சபதமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
உண்மையில், குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்று திமுக நினைத்திருந்தால், 2017-லேயே அதைச் செய்திருக்கலாம். நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோமே தவிர, பணநாயகத்தை அல்ல. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு, குட்கா, வருமான வரிசோதனை போன்ற வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் தவெகவில் இணைந்ததன் மூலம் மட்டும் புனிதம் ஆகிவிடுவாரா?
சட்டப்பேரவையானது படப்பிடிப்புத் தளம் போல மாறியுள்ளது. அதில் முதல்வர் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். நாங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக நடித்து வருகிறோம். எல்லோரையும் நடிகர்களாக மாற்றி இருக்கக்கூடிய பெருமை தவெக ஆட்சிக்கே சேரும். தற்போது அமைந்துள்ள தவெக கூட்டணி என்பது ஒரு ‘முற்போக்கு கல்லாப்பெட்டி கூட்டணி’ ஆகும் என்றார்.