

செல்வப்பெருந்தகை
சென்னை: “பாஜக எங்களை அடக்கி, முடக்கி விட முடியாது. நாங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறார்கள். எனது வீடு, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது வீடுகளும் முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று காலை ராகுல் காந்தி திருவனந்தபுரம் வருகிறார். அவரை காணச் செல்லவிருந்தேன். ஆனால் அனைத்து விமானங்களும் சென்ற பிறகு அவர்கள் கலைந்து செல்கிறார்கள். இது என்ன அநியாயம். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா?
நான் ஒரு வேட்பாளர் , சுதந்திரமாக வாக்கு சேகரிக்க வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். ஒரு மாநிலத் தலைவராக நான்தான் அவரின் வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான்தான் குளச்சலுக்கும், நாங்குநேரிக்கும், சங்கரன் கோயிலுக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கும் அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
நான் அவருடன் சென்று அதை ஏற்பாடு செய்யக் கூடாது என்று என்னை முடக்குவது எந்த விதத்தில் நியாயம்?. ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லை மாநிலத் தலைவராக நான் அதை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தடுக்கிறீர்களா?. எங்களை கட்டி போட முடியாது; நீங்கள் அச்சுறுத்த முடியாது.
ஏன் எங்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை; அதிமுக வேட்பாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் பாஜகவில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் ஆதரவு இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவர்களின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது.
எங்களை அச்சுறுத்தி துன்புறுத்துகிறார்கள். பாஜக எங்களை அடக்கி, முடக்கி விட முடியாது. நீங்கள் அடிக்க அடிக்க நாங்கள் எழுந்து தான் நிற்போம். நாங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். தமிழ் பேசும் அதிகாரிகளே ஒருவர்கூட இல்லை. என்ன மாதிரியான அச்சுறுத்தல் இது” இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகையின் பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு கடும் கண்டனம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பாஜக. அரசு செய்து கொண்டிருக்கும் அட்டூழியத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.