

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை: தமிழகத்தில் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், மிக மெத்தனமாக சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இதுவரை 16,577 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியாமல் தமிழக மக்கள் தத்தளித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், மிக மெத்தனமாக தமிழக சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், உள்ளிட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.