

சீமான்
திருநெல்வேலி: “பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிர்வாகி திருமண மண்டபத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது.
தமிழக சட்டப் பேரவை தலைவருக்கு அங்கே நிலம் இருக்கிறது. அரசின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நான் பணகுடி சென்றால் பிரச்சினையாகிவிடும் என்பதால் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
கால்நடைகளின் வாழ்விடத்தில் அவைகளுக்கு அனுமதி வழங்காமல் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; தமிழக தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தினால் 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியும்.
தமிழகத்தின் பால் தேவையை ஆந்திர மாநிலம் பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து வரும் பால் தூய்மையானதா என்ற கேள்வி எழுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒரு தோல்வியுற்ற திட்டம். சென்னையில் மெட்ரோ திட்டங்கள் மூலம் தூண்களாகவே நகர் காட்சியளிக்கிறது.
அது சிங்காரச் சென்னை இல்லை, தூண் சென்னை ஆக உள்ளது. நாங்கள் இருப்பதால் பரந்தூர் விமான நிலையம் வராது. மக்களுக்கு மறைமுகமாக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை மூலமாக பணம் கொடுக்கப்படுகிறது.
இலவச திட்டங்கள் அவசியம் இல்லை. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. திமுகவிற்கு மாற்று அதிமுக அல்ல.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே எந்தக் கொள்கை மாற்றமும் இல்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை.
பிஹாரில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாஜக வெற்றியை பெற்றுவிட்டது. அதுபோல் தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கலாம். ஏன் ரூ.5 ஆயிரம்கூட கொடுக்கலாம்.
வாக்கிற்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்தில் தேவை” என்று அவர் தெரிவித்தார். மீண்டும் விஜய் பிரச்சார பயணம் தொடங்க திட்டமிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.