“அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகளை தடுப்பீர்” - சீமான்

“அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகளை தடுப்பீர்” - சீமான்
Updated on
1 min read

சென்னை: ‘ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த தமிழ்ச்செல்வி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உயிர் காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் லாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்று முழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும்.

ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.

ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

“அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகளை தடுப்பீர்” - சீமான்
‘தவெக - பாஜகவுக்கு இணக்கமான தொடர்பு’ - ஆளுநர் உரை மீது உதயநிதி சந்தேகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in