

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிட திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டறிவது, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது மற்றும் கூடுதல் சாட்சியங்களைச் சேகரிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் அடையாளம் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய விரிவான விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த மோசடியில் சிக்கியிருக்கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் முழுமையான பட்டியலை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்வரக் கூடும் என்பதால், வழக்கின் பரிமாணம் இன்னும் விரிவடையும். எனவே, பணப் பரிவர்த்தனைகள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.