

செந்தில் பாலாஜி
புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஜூலை 28-ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி உடனடியாக செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக் ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை ஏற்கெனவே நடத்தப்பட்டது. அப்போது கூடுதல் செயலராக இருந்தவர் ஒரு வாக்குமூலத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றி கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த விவகாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ‘‘செந்தில் பாலாஜி எந்தெந்தத்துறையில் அமைச்சராக இருந்தாரோ அந்த துறையில் அவர் மீது ஊழல் புகார்கள் உள்ளன. அதற்கான முகாந்திரங்கள் இருப்பதால்தான் புலன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடுக்கப்படவில்லை.
இது ஒரு மிகப்பெரிய ஊழல் விவகாரம் என்பதால் புலன் விசாரணையின் போது தேவை ஏற்பட்டால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். செந்தில் பாலாஜியைப் பொறுத்த வரை வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காமல் இழுத்தடிக்கக் கூடிய நபர்’’ என்று தெரிவித்தார்.
இந்த கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவர் குற்றவாளி என்றால் விளைவுகளை அவர் சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், ‘‘புலன் விசாரணையின் போது செந்தில் பாலாஜியைக் காவலில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது?’’ என்று சந்தேகம் எழுப்பினார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘அவ்வாறு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், விதி மீறல்களில் செந்தில் பாலாஜி ஈடுபட்டாலோ, விதிமீறல் நடந்தாலோ அரசு தரப்பு இந்த நீதிமன்றத்தை உடனடியாக அணுகலாம்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணைக்குச் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்குவார். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்’’ என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி, அவரை கைது செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவற்றை மீறினால், முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
விலக்கு கோரி மனு: குதிரை பேரம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில், ஜூலை 30 முதல் ஆக.4-ம் தேதி வரை போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் வழக்கில் 2 பேர் கைது: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ்.விசாகன் உட்பட 7 பேர் மீது கடந்த 28-ம் தேதி புதிய வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஆதரவாளர் என கூறப்படும் கரூர் கார்த்திக், அவரது நெருங்கிய கூட்டாளி ரமேஷ் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.