

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.
திமுக ஆட்சியில் நல்லாட்சி நடக்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கோட்டைமேடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், வி.கே.சசிகலா பேசியவாவது: ஜெயலலிதா 2016-ல் உடல்நிலை சரியில்லாமல் 72 நாள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவருடன் இருந்தேன். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அதுதான், கடைசி வரை அவரது உடல் நலனுக்கு பாதகமாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா மரணத்தில் அரசியல் செய்தனர். இதில் எதிரிகள் என்னென்ன கதைகள் கட்டிவிட்டனர்.
ஜெயலலிதா மறைந்த அன்று இரவு மந்திரிகள், எம்எல்ஏ.க்கள் வந்து நீங்கள்தான் முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக வேண்டும் என்றனர். நான் ஜெயலலிதாவுக்கு காரியம் செய்ய வேண்டியதிருக்கிறது. முன்புபோல் பன்னீர்செல்வமே முதலமைச்சராக இருக்கட்டும் என்றேன். முதலமைச்சரான பன்னீர்செல்வம் மீது அமைச்சர்கள் என்னிடம் தினமும் வந்து குறைகள் சொன்னார்கள். பிரச்சினைகள் புகைந்ததால் தடுக்க நான் முதல்வராக ஒப்புக்கொண்டேன். அவரையும் கேட்டுத்தான் முடிவு எடுத்தேன்.
பின்னர் பன்னீர்செல்வத்திற்கு என்ன ஆனது தெரியவில்லை. யாரோ சொல்லி, ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தம் நடத்தினார். தற்போது அதுவே அவருக்கு சிக்கலாகி விட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், நிர்வாகிகள் நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை தொந்தரவு பண்ணி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர்.
நான் முதலமைச்சராக கடிதம் கொடுத்தபோது ஆளுநர் அங்கு இல்லை. கடிதம் கொடுத்தவுடன் நீதிமன்ற தீர்ப்பு சொல்லி வைத்தார்போல் சீக்கிரமாக வந்தது. அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அதிமுக அரசை கலைக்கவிடக் கூடாது, எதிர்க்கட்சித் தலைவராக தற்போது இருப்பவரை (பழனிசாமி) முதலமைச்சராக அமரவைத்து விட்டு ஜெயிலுக்கு போக வேண்டும் என உடனடி முடிவெடுத்தேன்.
திமுக ஆட்சியில் நல்லாட்சி நடக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர்கள் என்றும் நம்மை கைவிட மாட்டார்கள். புதிய கட்சியை விரைவில் ஆரம்பிக்கப்போகிறோம். இது ஒருதிராவிட கட்சியாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் கட்சி இருக்கும்.
எதிரிகள் துரோகிகளை வேரறுக்கும் கட்சியாக அது இருக்கும். தற்போது கட்சி கொடியை மட்டும் அறிமுகம் செய்கிறேன். கருப்பு வெள்ளை சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம், அந்த கொடியில் இருக்கும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.