

சென்னை: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி இன்று முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்துகிறார். சென்னையில், 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில், 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன.
இதில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவு வழித் தடத்தில் பல இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இத்தடத்தில் ஒருபகுதியாக, பூந்தமல்லி - போரூர் வரை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கட்ட சோதனை பணிகள் முடிக்கப்பட்டன.
பின்னர், போரூர் - வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்திலும் வெற்றிகரமாக மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளன.
தண்டவாள செயல்திறன், சிக்னல் அமைப்பு, ரயில் பெட்டி இணைப்பு திறன் திறன் ஆகிய ஆய்வுகள் முடித்து, இதற்கான பாதுகாப்பு அறிக்கை, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 13-ம் தேதி வரை, பூந்தமல்லி - வடபழனி வரையில் 16 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் முழுமையாக ஆய்வு நடத்த உள்ளனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித் தடத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பாதைகள், ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு நடத்துவர்.
இன்றும், நாளையும் டிராலியில் சென்று ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்வர். தொடர்ந்து, பணிகள் முடிக்கப்பட்டு ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்வர். ரயில் தண்டவாளம், ரயில் பிரேக் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆய்வு நடத்துவர்.
3-வது நாளில் மெட்ரோ ரயில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்துவார். பின்னர், மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த தடத்தில், இந்த மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.