

ராஜபாளையம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத்தகடு திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்ட தங்கத்தகடு ஆகியவை, கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டன. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர்.
அதன்பின் கிருஷ்ணனை சேத்தூர் ஊரக காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று (டிச.30) திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார்.
இதுகுறித்து கிருஷ்ணன் கூறும்போது, “எஸ்.ஐ.டி போலீஸார் என் வீட்டில் எந்த பொருளையும் கைப்பற்றவில்லை. அவர்களது அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்.
பாலமுருகன், மணி ஆகியோரை தெரியுமா? எனக் கேட்டார்கள். நான்தெரியாது என்றேன். சபரிமலை குறித்து அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை” என்றார். கிருஷ்ணன் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.