

சுதர்ஷனா சுந்தர், வி.எம்.வேலுமணி,
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய பயிற்சியாளரும், வழக்கறிஞருமான சுதர்ஷனா சுந்தர் ஆகியோரை நியமன பெண் உறுப்பினர்களாக நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மொத்தம் 25 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் 30 சதவீத இடஒதுக்கீட்டின்படி 7 பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
18 ஆண் உறுப்பினர்கள், 5 பெண் உறுப்பினர்கள் என 23 பேர் நேரடி தேர்தல் மூலமாகவும், எஞ்சிய 2 பெண் உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமன உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடந்த மார்ச் 30-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் முன்னுரிமை வாக்குகள் அடிப்படையில் சென்னை பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், இ.பாலமுருகன், என்.விஜயராஜ், கே.தமிழ்வாணன், ஆர். கிரிராஜன், கே.பாலு, எம். வேல்முருகன், ஜி. மோகனகிருஷ்ணன், திருச்செங்கோடு சி.பரணிதரன், தூத்துக்குடி டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, நாமக்கல் ஆர்.அய்யாவு, தஞ்சாவூர் வி.கார்த்திகேயன், செஞ்சி கே.கதிரவன், ஈரோடு எம்.அருள்முருகன், சேலம் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, திருச்சி எம்.ராஜேந்திரகுமார், மதுரை தாளை முத்தரசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல பெண் வழக்கறிஞர்களில் டி.பிரசன்னா, ஏ.ராஜேஸ்வரி, எல்.சுமதி, பி,சாவித்திரி, ஆர். விஜயலட்சுமி என மொத்தம் 23 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான 2 பெண் நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய பயிற்சியாளரும், வழக்கறிஞருமான சுதர்ஷனா சுந்தர் ஆகியோரை நியமன உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுமதி வெளியிட்டுள்ளார்.