

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ். ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு டிச.27-ம் தேதி நடத்தப்பட்டது.
அத்தேர்வை 42,064 பேர் எழுதினர். இந்நிலையில், இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு
பணி அனுபவத்துக்கான மதிப்பெண் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதிகள் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அசல் ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அளிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அசல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கான இடம், தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.