பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலப்பதிவு முறைகேடு குறித்து பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழு நேற்று தனது விசாரணையைத் தொடங்கியது.
பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும், தலைமறைவாக உள்ள இந்த நிலத்தை விற்ற தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர். முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவில் உள்ள கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத்துறைத் தலைவர் பூங்கொடி, சென்னை மாவட்டப் பதிவாளர் கண்ணன் ஆகியோர் நேற்று பழநி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செல்வகுமார் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சர்ச்சைக்குரிய ரூ.100 கோடி நில ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், பத்திரப்பதிவு நடந்த ஜூலை 6-ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, 5-வது நாளாகவிசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை 9.30 மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். தங்களுக்கு தேவையான ஆவணங்கள், வீடியோ பதிவுகளை எடுத்துச் சென்றனர். உயர்நிலைக் குழு மற்றும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை காரணமாக நேற்று பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பத்திரப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
போலீஸார் ஆலோசனை: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி ஷாஜிதா நேற்று டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தலைமறைவாக உள்ள நிலத்தை விற்றவர், நிலத்தை வாங்கியோர் மற்றும் மோசடிக்கு காரணமானவர்களை கைது செய்ய ஆலோசனைகளை வழங்கினார்.